கிராம சபையின் பலத்தை மக்களுக்கு உணர வைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அந்தவகையில் சேலம் கோட்டை மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசியது: கிராம சபை என்ற அற்புத ஆயுதம் உள்ளது. கிராம சபையின் பலம் சட்டப்பேரவையின் பலத்துக்கு இணையானது. கிராம சபையின் பலத்தை மக்களிடம் இருந்து அகற்றி விட்டார்கள். எனவே, நாம் கிராம சபையின் பலத்தை மக்களுக்கு உணர வைக்க வேண்டும்.
நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். மழை போதிய அளவுக்கு பெய்தாலும், மழை நீரைச் சேமிக்கத் தெரியாமல் விரயம் செய்து வருகிறோம். வாக்காளர்கள் எல்லோரும் விலை போக முடியாது. என்னிடம் விலை பேசி தோற்று போனார்கள். நான் விலை போக மாட்டேன் என்றார்.
கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் நடிகை ஸ்ரீப்ரியா, பாரதி கிருஷ்ணகுமார், மௌரியா, சினேகன், தங்கவேலு, பிரபு மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.