முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:
, நெடுஞ்சாலை துறை வழக்கு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதால், முதல்வர் பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், ராமதாஸ் போன்றோர் கூறி வருகின்றனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் யாரையும் தவறாக நினைக்கவில்லை என்று கூறியுள்ளது. இதனால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரி கனிமொழி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது பதவி விலகினாரா?, அதுபோன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் அன்றைய தினம் பதவியில் இருந்தபோது அவர் மீது வழக்கு இருந்தது. அவர் ராஜிநாமா செய்தாரா? இதுதொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வழக்கு குறித்து தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று சொல்வதெல்லாம் அரசியலுக்காக மட்டும்தான். எப்படியாவது இந்த அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று முயற்சி செய்தனர். அது முடியாமல் போனதால், இவ்வாறாக கூறி வருகின்றனர். தமிழக முதல்வர் ஒருபோதும் பதவி விலக மாட்டார், அது ஒருபோதும் நடக்காது என்றார்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி 4,000 மெகாவாட் மின்சார உற்பத்தி திட்டம் வரும் 2021, 2022 ஆம் ஆண்டில் தான் வரும். ஆண்டுதோறும் மின் தேவை 1,000 மெகாவாட் அதிகரித்து வரும் நிலையில், இடைப்பட்ட 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு 1,000 மெகாவாட் என 3,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளோம்.
மதுபானங்களை மொத்தமாக வாங்குபவர்களின் சிரமங்களைப் போக்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் கூடிய விரைவில் ஸ்வைப்பிங் இயந்திரம் கொண்டு வரப்பட உள்ளது என்றார்.