சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள ரூ.3,120 கோடி அளவிலான நெடுஞ்சாலைத்துறை ஊழலைச் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பேட்டியளித்தது கடும் கண்டனத்துக்குரியது. லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிமுகவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை பொன்னையனின் பேட்டி தெளிவாக்குகிறது. இதற்குப் பிறகும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையோ, விஜிலென்ஸ் கமிஷனோ தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்று கூறும் அருகதை அதிமுக அரசுக்கு இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் நீடிப்பதற்கான அனைத்து தார்மிக உரிமைகளையும் இழந்து விட்டதால், உடனடியாகப் பதவி விலக வேண்டும். பதவியிலிருந்து விலக மறுத்தால், அவரை தமிழக ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
வைகோ: நெடுஞ்சாலைத்துறையின் ரூ.3,120 கோடி மதிப்புடைய ஒப்பந்தப் பணிகள் முதல்வரின் உறவினர் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கு விசாரணையில் நெடுஞ்சாலைத்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் முதல்வருக்கு நற்சான்று அளித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, முதல்வர் பொறுப்பில் நீடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தார்மிக உரிமை இல்லை. அவர் பதவி விலக வேண்டும்.