அதிமுக கட்சியின் 47-வது ஆண்டு விழா வரும் 17-ஆம் தேதியன்று சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
அதிமுக தொடங்கப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவடைந்து, வரும் 17-ஆம் தேதியன்று 47-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதைக் கொண்டாடும் வகையில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு கட்சித் தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சிக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்படும்.
இந்த விழா அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும்.
கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மரணம் அடைந்த தொண்டர்கள் குடும்பங்களுக்கும், சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கும் நிதியுதவி அளிக்கப்படும். கட்சியின் 47-வது ஆண்டுத் தொடக்க விழாவை ஒட்டி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.