குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதையடுத்து, பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
மின்னல் தாக்கி இருவர் காயம்: தென்காசி அருகே ஆய்க்குடி கம்பிளி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (70), ஆனந்த் (28). இவர்கள் இருவரும் மழை பெய்தபோது ஆய்க்குடி பகுதியில் ஓரமாக ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது மின்னல் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். மேலும், மூன்று ஆடுகள் உயிரிழந்தன.