சென்னை: வரும் 26-ந்தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி நிருபர்களிடம் ஞாயிறன்று கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து விட்டது. இனி வடகிழக்கு பருவ மழை தொடங்கும். வருகிற 26-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
வடக்கு அந்தமானில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மேலும் அது மேற்கொண்டு நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும்.
தற்போது தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உண்டு.
சென்னை நகரைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.