சுருளி அருவியில் வெள்ளம் குறைந்ததால் திங்கள்கிழமை சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க சரணாலயத்தினர் அனுமதித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த அக்.19-ஆம் தேதி பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதைக் கண்காணித்த மேகமலை வன சரணாலயத்தினர் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை குளிக்க அனுமதிக்கவில்லை.
இதனால் அருவிக்கு வந்த பக்தர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து படிப்படியாக மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். சுருளி அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் நெருக்கடி இல்லாமல் மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்துச் சென்றனர்.