தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

திருநெல்வேலி, திருச்சி உள்பட 4 இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களை ரூ. 12 கோடி மதிப்பில் உலகத் தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மாநில தொல்லியல் மற்றும் தமிழ்
தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி, திருச்சி உள்பட 4 இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களை ரூ. 12 கோடி மதிப்பில் உலகத் தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மாநில தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்  பாண்டியராஜன் ஞாயிற்றுக்கிழமை அருங்காட்சியகத்திற்கு வந்தார். மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அமைச்சரை வரவேற்றார். அருங்காட்சியகத்திலுள்ள கலை மற்றும் அரிய பொருள்களை அமைச்சர் பார்வையிட்டார்.
இதையடுத்து, அருங்காட்சிகத்தில் பின்பகுதியில் கலையரங்கு, திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்புகள் அடங்கிய அரங்கு, பார்வையாளர் மாடம் போன்றவை அமையவிருக்கும் இடத்தைப் பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  கடந்த ஆண்டு தரங்கம்பாடி அருங்காட்சியகத்தில் ரூ. 4.80 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழாண்டு திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, ஊட்டி ஆகிய 4 இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் வகையில் மத்திய அரசு உதவியுடன் ரூ. 12 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழாண்டு தேனி, திருவண்ணாமலையில்  2 புதிய மாவட்ட அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் ரூ. 56 கோடியில் பழந்தமிழர் பண்பாட்டு சின்னங்கள், உலக தமிழர்கள் புலம் பெயர்வு போன்றவை காட்சிப்படுத்தப்படும். இது தென் தமிழகத்தின் கலை பண்பாட்டு மையமாக திகழும் வகையில் உருவாக்கப்படும்.
அருங்காட்சியகங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். 2017இல் அரசு அருங்காட்சியகங்களை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதில் 8 சதவீதம் பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அருங்காட்சியகங்களில் 1.22 லட்சம் அரிய பொருள்கள் உள்ளன. இதில் 3இல் ஒரு பங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் அருங்காட்சியகங்களை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 180 அகழாய்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழரின் தொன்மை, பண்பாட்டினை தொல்லியல் பாங்கோடு மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடியில் அகழாய்வு செய்த அரும்பொருள்களை மக்கள் பார்வையிடும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். அருங்காட்சியகங்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி வருமானம் கிடைக்கிறது. இதனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களின் வரலாற்றை அறியும் வகையில் 2019, மார்ச் மாதம் வரலாற்று ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.
விரைவில் இணைவர்: தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமைச்சர் கூறியது: பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வரவேண்டும் என முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது வரவேற்கக்கூடியது. விரைவில் அனைவரும் இணைந்து பணி ஆற்றும் சூழல் உள்ளது. அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் கண்டிப்பாக நீடிக்கும். இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார்.
நினைவுப் பரிசு: பாளையங்கோட்டை பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் கவிஞர் பே. ராஜேந்திரன், அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். அப்போது, கைத்தொழில் பொருள்கள் நலச் சங்கத் தலைவர் மங்களாதேவி, திசையன்விளை முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஏ.கே. சீனிவாசன், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com