சென்னை: செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் 50 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செல்போன் பேசியபடி அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் குறித்து ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
பணியின் போது ஓட்டுநர்கள் செல்போனில் பேசுவதால், கவனம் சிதறி சாலை விபத்து நேரிட அதிக வாய்ப்புகள் இருப்பதால், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முன் வந்தனர்.
அதன்படி, புகார்கள் மீது விசாரணை நடத்தி 50 ஓட்டுநர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மீண்டும் இதே தவறை செய்தால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.