நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடல் பரப்பில் மீன்பிடித்த 18 தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்களால் செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டனர்.
வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கோ. செல்வம். இவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த மா. குட்டியாண்டி, கி. பன்னீர்செல்வம், ந. ராசேந்திரன், ம. ராசேந்திரன், ரெ. சுப்பிரமணியன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பகல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அத்துடன், மா. தமிழ்ச்செல்வம், கோ. சிவபாலன், கோ. மணிவண்ணன் ஆகியோருக்குச் சொந்தமான படகுகள் என மொத்தம் 5 கண்ணாடியிழைப் படகுகளில், 18 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே செவ்வாய்க்கிழமை இரவு வலை விரித்து மீன்பிடிக்க ஆயத்தமாயினர். அப்போது, 3 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் எனக் கருதப்படும் 10-க்கும் மேற்பட்டோர், தமிழக மீனவர்கள் இருந்த படகுகளை நெருங்கி எச்சரித்துள்ளனர்.
மேலும், மீனவர்கள் விரித்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை கடலிலேயே துண்டித்து விட்ட அவர்கள், மீனவர்களை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசியும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும் அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்த வலைகளையும் அபகரித்தனராம்.
இலங்கை மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களும், புதன்கிழமை காலை கரை திரும்பினர். துண்டிக்கப்பட்ட வலைகளுடன் வந்த மீனவர்களிடம் கடலோரக் காவல் நிலைய போலீஸார், தனிப்பிரிவு போலீஸார் மற்றும் மீன்வளத்துறையினர் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.