சாயக் கழிவுகளால் காவிரி ஆறு மாசடைவதைத் தடுக்கும் வகையில் ரூ.700 கோடியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கே.சி.கருப்பணன் மேலும் கூறியது: காவிரி ஆற்றில் சாய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் தண்ணீர் மாசடைவதைத் தடுக்கும் வகையில் ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில், ரூ.700 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சாயப்பட்டறை உரிமையாளர்கள் நிலத்தை வழங்குவதில் பல்வேறு பகுதிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது ஈரோடு மாவட்டத்தில், பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் ஈரோடு மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.