களக்காடு- முண்டன்துறை புலிகள் காப்பகத்தில், புலிகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதில், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் உள்பட 200 பேர் கலந்துகொண்டனர்.
களக்காடு- முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 2018-19ஆம் ஆண்டுக்கான புலிலிகள் கணக்கெடுக்கும் பணி செப். 10 ஆம் தேதி தொடங்கி செப். 18 வரை நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுக்கும் பணியில் கலந்துகொள்ளும் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்களுக்கு பாபநாசம் வனத்துறை கூட்ட அரங்கில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பாபநாசம் வனச்சரகர் பாரத் கூறியது: இந்தப் பணியில் பாபநாசம் வனப் பகுதியில் 13 குழுக்கள், அம்பாசமுத்திரம் வனப் பகுதியில் 6 குழுக்கள், முண்டன்துறை வனப் பகுதியில் 6 குழுக்கள், கடையம் வனப் பகுதியில் 4 குழுக்கள் என மொத்தம் 29 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல் 3 நாள்கள் நேர்கோட்டு முறையில் ஊன் உண்ணிகள் குறித்தும், அடுத்த 3 நாள்கள் தாவர உண்ணிகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறும். செப். 17,18 ஆகிய இரு நாள்களும் 29 வனப் பகுதிகளிலும் கணக்கெடுப்புப் பணியில் கிடைத்த தடங்கள் மற்றும் மாதிரிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்றார் அவர்.
புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதை முன்னிட்டு, பாபநாசம் வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோரையாறு வனப் பகுதியில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டபோது சிறுத்தையின் கால்தடம் காணப்பட்டதையடுத்து அதன் காலடித் தடம் பதிவு செய்யப்பட்டது.
தலையணை, நம்பி கோயிலுக்கு செல்லத் தடை: கணக்கெடுப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப்.10) முதல் செப்.18ஆம் தேதி வரை களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில், மேல்கோதையாறு ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.