முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் காற்றில் எளிதில் பரவும் நோய்களைத் தவிர்க்கலாம் என சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் பொது மருத்துவர் ஜி.சாந்தாமூர்த்தி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள், மருத்துவர் உறவு மேம்படுதல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காற்றில் பரவும் நோய்கள் தடுப்பு குறித்து பொது மருத்துவர் ஜி.சாந்தாமூர்த்தி பேசியதாவது:
சளி, காய்ச்சல் முதல் காலரா, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகின்றன. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளே தொற்றுநோய்கள் பெருக முக்கியக் காரணமாகும். காற்று, நீர், ரத்தம் ஆகியவை வழியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று நோய்கள் பரவும். இதில் தட்டம்மை, சின்னம்மை, காசநோய், பன்றிக் காய்ச்சல் போன்றவை காற்று மூலம் பரவக்கூடியவையாகும். நோய்வாய்ப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.
நோய் பாதிப்புள்ளபோது வீட்டிலேயே இருக்க வேண்டும். இதுபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் காற்றில் பரவும் நோய்களைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் 50 -க்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டனர்.