வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த யானைக் கூட்டம் அங்கிருந்த உதவி தோட்ட அதிகாரியின் வீட்டை இடித்து தள்ளியது. இதில் அவர் பின்பக்கம் வழியாக குடும்பத்துடன் தப்பிச் சென்றார்.
கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தினந்தோறும் ஒவ்வொரு எஸ்டேட்டுக்கு இடம்பெயர்ந்து செல்லும் யானைகள் பல்வேறு வகையில் சேதங்களை ஏற்படுத்தி
வருகின்றன. இந்நிலையில், வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த 8 யானைகள், அங்குள்ள உதவித் தோட்ட அதிகாரி சரவணன் வீட்டை முட்டி தள்ளின.
யானைகள் வந்ததை அறிந்த சரவணன், மனைவி, மகனுடன் வீட்டின் பின்பக்க வழியாகத் தப்பி அருகிலுள்ள தொழிற்சாலைக்குள் சென்றுவிட்டார்.
தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற வனத் துறையினர் யானைகளை விரட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் சரவணனின் வீட்டின் சுவர்கள் மற்றும் உள்ளே இருந்த பொருள்கள் சேதமடைந்தன.