விளையாட்டுத் துறையில் இந்தியா- ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான உறவை வலுப் பெறச் செய்வதற்காக பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு நட்புறவு விருது' ரஷிய அரசின் சார்பில் வழங்கப்பட்டது.
நட்புறவு விருது' என்பது இரண்டு நாடுகளுக்கிடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல், புரிதல் ஆகியவற்றுக்காகப் பாடுபட்ட பிற நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு ரஷிய அரசால் வழங்கப்படுவதாகும். இந்த விருதை இந்தியாவின் செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதர் செர்கே கோதோவ் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினார்.
இது குறித்து ரஷிய துணைத் தூதர் செர்கே கோதோவ் கூறுகையில், கலை, கலாசாரம் போன்றவற்றின் மீது ரஷியா மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு, கலாசாரத்தை வளர்க்க இது பெரிதும் உதவும் என்றார்.
இந்த நிகழ்ச்சியையொட்டி ரஷிய பெண் ஓவியர் கட்யா பெல்யாவ்ஸ்கயா வரைந்த செஸ் விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ஓவியக் கண்காட்சி ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
செப்.20-ஆம் தேதி வரை...இக்கண்காட்சியை செப். 20-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.