ரௌடி புல்லட் நாகராஜன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே வேலூர் சிறைக்கு செவ்வாய்க்கிழமை மாற்றம் செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜன் (50), சிறை அதிகாரி மற்றும் காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மதுரை சிறைத்துறை அதிகாரி ஊர்மிளாவின் புகாரின் பேரில் பெரியகுளம் மற்றும் கரிமேடு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை நாகராஜனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அதன்பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்குப் பின்னர் நாகராஜனுக்கு மூவர் அடைக்கப்படும் சிபி 1 ஆவது பிளாக்கில் உள்ள அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, அந்த அறையில் இருவர் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, காலை 11.30 மணியளவில் நாகராஜனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.