உள்ளாட்சித் துறையில் ஊழல் நடைபெற்றதாக நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளேன். அதேவேளையில், நிரூபிக்காவிட்டால் கட்சி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் பதவி விலகத் தயாரா என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது, தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. மேலும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதைக் கேட்டு அக்கட்சியின்அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செயல்படுகிறார். அவரது கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், உள்ளாட்சித் துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால் அமைச்சர் மற்றும் கட்சிப் பதவியில் இருந்து இன்றே விலகத் தயார். அரசியலை விட்டும் விலகத் தயார். அதே நேரத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் கட்சித் தலைவர் பதவி, எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் விலகத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.