அதிமுக அமைப்புச் செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கரை நியமித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளனர்.
அதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு அதிமுக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுகவின் சட்ட ஆலோசகராக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், மதுரை மாவட்ட புறநகர் முன்னாள் செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோரும் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக காஞ்சி பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 19-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது.
அதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று கட்சி நிர்வாக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அணிகள் உருவாக்கப்பட்டன. அமைப்புச் செயலாளர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டனர்.