இந்திய ரயில்வேயின் இரண்டு வாரச் சுற்றுலா கொண்டாட்டங்களையொட்டி உதகை - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய ரயில்வேயால் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சுற்றுலா வாரமாக கொண்டாடப்படுகிறது. இதை மேலும் சிறப்பிக்கும் வகையில் உதகை - கேத்தி இடையே செப்டம்பர் 16ஆம் தேதியும், 23ஆம் தேதியும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இவ்விரு தினங்களிலும் 3 பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். இப்பெட்டிகளில் முதல் வகுப்பில் 80 பயணிகளும், இரண்டாம் வகுப்பில் 40 பயணிகளும் பயணிக்கலாம்.
முதல் வகுப்பில் பயணிக்க ரூ. 400, இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ. 300 கட்டணங்களாகும். இக்கட்டணம் ரூ. 100 மதிப்பிலான பரிசுப் பொருள்களையும் உள்ளடக்கியதாகும்.
இந்த சிறப்பு மலை ரயில் உதகை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குப் புறப்பட்டு 10.11 மணிக்கு லவ்டேல் நிலையத்தை சென்றடையும். அங்கிருந்து 10.13 மணிக்குப் புறப்பட்டு 10.30க்கு கேத்தியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் கேத்தியில் இருந்து 11மணிக்குப் புறப்பட்டு 11.30 மணிக்கு உதகையை வந்தடையும்.
அதேபோல பிற்பகலில் 2.30 மணிக்கு உதகையில் இருந்து புறப்பட்டு 2.41க்கு லவ்டேலை சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 2.43க்குப் புறப்பட்டு 3 மணிக்கு கேத்தியைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கேத்தியில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு உதகையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.