திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் இருந்து 2 ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பூசாரி வெள்ளிக்கிழமை இரவு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
சனிக்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது, கோயில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, ஒன்றேகால் அடி உயரமுள்ள ஐம்பொன் சாய்பாபா சிலை, ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை ஆகியவை திருடப்பட்டு இருந்ததாம்.
2 சிலைகளும் சேர்ந்து சுமார் 50 கிலோ எடை கொண்டதாம். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.