செங்கோட்டை, தென்காசியில் செப். 22-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

செங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 
செங்கோட்டை, தென்காசியில் செப். 22-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிந்து, 20-க்கும் அதிகமானோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தி இருதரப்பையும் கலைத்தனர். தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் குண்டாற்றில் கரைக்கப்பட்டன. மேலும், வெள்ளிக்கிழமை இரவும் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு போலீஸார் தடியடி நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். செங்கோட்டை - பிரானூர் எல்லையில் உள்ள தனியார் அச்சகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து பெறப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் கூறியது: செங்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வரக்கூடிய புகார்கள் அனைத்தும் பெறப்பட்டு, தன்மைக்கு ஏற்ப வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை வரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சந்தேகத்திற்குரிய சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செங்கோட்டை மற்றும் தெனன்காசிப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com