தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் தமிழக அரசு மோசமாக செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களாக திகழ்பவை எவை என்பதைக் கண்டறியும் ஆய்வை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைவராக உள்ள பொருளாதார வளர்ச்சி நிறுவனம் அண்மையில் நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் தொழில் அனுமதி மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் தமிழகம் மிக மோசமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் 21 சதவீத நிறுவனங்களுக்கு மட்டும்தான் 15 நாள்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 52 சதவீத நிறுவனங்களுக்கு 45 நாள்கள் அவகாசத்திலும், 27 சதவீத நிறுவனங்களுக்கு 45 நாள்களுக்குப் பிறகும்தான் அனுமதி வழங்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் 30 நாள்களுக்குள்ளாகவே அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள்தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி தடைபடுவதற்கு காரணம். இத்தகைய சூழலில் 2-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.