சேலம்: புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லை என்பதால் காதல் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால், திருமணமான மூன்றே நாடகளில் கணவன் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நிகழந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் அருகே உள்ளது கோட்டக்கவுண்டன்பட்டி, இங்கு வசித்து வருபவர் செல்லத்துரை. தனியார் நிறுவன ஊழியரான அவர் தன்னுடன் வேலை செய்யும் தீபா என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த மூன்று நாடகளுக்கு முன் திருமணம் நிகழ்ந்துள்ளது.
திருமணம் முடிந்து செல்லத்துரை வீட்டிற்கு வந்த தீபாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்த தீபா வருத்தத்துடன் இருந்துள்ளார். செல்லத்துரையிடம் அதனை வெளிப்படுத்திய பொழுது 10 நாட்களில் அதற்கு ஏற்பாடு செய்து விடுவதாக கூறியுள்ளார்.
ஆனால் மறுநாள் வேலைக்குச் செல்வதாக கூறி விட்டுச் சென்றவர் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. அங்கிருந்து நேராக தனது வீட்டிற்கு திரும்பி விட்டார். செல்லத்துரை அங்கு சென்று தீபாவை அழைத்த பொழுது, கழிப்பறை கட்டிய பின்பு தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறி விட்டார்.
திருமணமான மூன்று நாட்களிலேயே மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதன் காரணமாக விரக்தியில் இருந்த செல்லத்துரை, வியாழன் காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.