சென்னை: ரபேல் ஊழல் குறித்த வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதேபோல் இந்த ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்களை இந்து பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
இவ்வாறு வெளியான தகவல்களை தொகுத்து பத்திரிகையாளர் எஸ்.விஜயன் என்பவர் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா செவ்வாய் மாலை நடைபெறுவதாகவும், அதில் இந்து என்.ராம், ஊடகவியலாளர் ஜெயராணி மற்றும் இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் திடீர் திருப்பமாக செவ்வாய் பிற்பகல் பாரதி புத்தகாலய அலுவலகம் சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் சென்ற போலீசார் அங்கிருந்த குறிப்பிட்ட புத்தக பிரதிகளை பறிமுதல் செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரபேல் ஊழல் குறித்த வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது
ரபேல் ஊழல் குறித்த புத்தகங்கள் எதையும் பறிமுதல் செய்ய இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் உடனடியாக அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.