தூத்துக்குடி தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் என்று தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரியில் செவ்வாயன்று அதிமுக-பாஜக கூட்டணி சார்பாக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கம், அதை எந்த சூழ்நிலையிலும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். எனவேதான் பாஜக தலைமையிலான மத்திய அரசு, துல்லிய விமான தாக்குதல் மூலம் தீவிரவாதிகளை அழித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகாலம் சிறப்பாக நடைபெற்ற பாஜகவின் சிறப்பான ஆட்சி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும்.
பாஜக அரசு மத்திய அமைச்சரவையில் இரண்டு தமிழர்களுக்கு பதவி வழங்கி கவுரவித்துள்ளது.
விமானப் படை வீரர் அபிநந்தன் பிறந்த தமிழகத்தில் இருந்து பேசுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.
மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மக்களின் விருப்பமாகும்.
அதை சாத்தியமாக்க தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து உள்ளோம். பாஜக கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது.
தமிழகத்தில் போட்டியிடும் கனிமொழி மற்றும் கார்த்தி சிதம்பரம் இருவரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வரும். அத்துடன் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
எனவே இங்கு தமிழிசை சவுந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.