மத்திய, மாநில அரசுகளால் தமிழகத்தின் முக்கிய தொழிலான விவசாயம் குறிவைத்துத் தாக்கப்படுகிறது என்றார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்.
ஈரோடு மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கே.சி.செந்தில்குமாரை ஆதரித்து, ஈரோடு குமலன்குட்டை பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது:
மத்திய, மாநிலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப நல்ல ஒரு வாய்ப்பாக மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப் பேரவை இடைத் தேர்தலும் அமைந்துள்ளன. 18 தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றிபெறவில்லையெனில் அதிமுக அரசு இருக்காது. தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் தமிழகத்தில் இந்த ஆட்சி இருக்காது என்பதை மக்களே கூறுகின்றனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நாங்கள் விவசாயிகள் என்றும் போகும் இடமெல்லாம் சொல்லிக்கொள்பவர்கள் விவசாயிகளின் பிரச்னையை செவிமடுத்துக் கேட்கவில்லை. விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசாமல் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். தமிழகத்தின் முக்கியத் தொழிலான விவசாயத்தைக் குறிவைத்து மத்திய அரசு தாக்குகிறது. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வந்து தமிழக மக்களை துன்புறுத்த நினைக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக ஆட்சியாளர்கள் உள்ளனர். தாங்கள் தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் தமிழக மக்களை ஆட்சியாளர்கள் வஞ்சித்து வருகின்றனர். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளர் என்று திமுகவினர் சொல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியே அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. எனவே ராகுல் காந்தி பிரதமராக வர முடியாது என்றார்.