சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது இசை மேதை லிடியன் இசையால் அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம் பியானோ இசை உலகில் உலக புகழ்பெற்ற கலைஞன். சமீபத்தில் அமெரிக்காவில் இவருக்கு மாபெரும் இசை அங்கீகாரமும், ஒரு மில்லியன் டாலர் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாயன்று மதியம் கோபாலபுரம் கலைஞர் இல்லத்தில் லிடியன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கலைஞர் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தினார். அவரது பிஞ்சு கைவிரல்கள் பியானோ கீபோர்டு மீது துள்ளி குதித்து விளையாட, அங்கு இசை வெள்ளம் வழிந்தோடியது.
அவர் அஞ்சலி செலுத்தி முடிந்ததும் வந்திருந்த எல்லோரின் விருப்பத்திற்காக “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலை இசைத்தார். அதோடு ‘பிளைண்ட் போல்டு’ என்கிற விதத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு பியானோ இசைத்தது எல்லோர் கைதட்டலையும் அவருக்கு பெற்று தந்தது.
பின்னர் வெளியே திமுகவின் தயாநிதி மாறன், பியானோ இளம் மேதை லிடியன் நாதஸ்வரத்தை கவுரப்படுத்தினார். பிறகு இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்
அப்போது “கலைஞரை உங்களுக்கு எதற்காக பிடிக்கும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர் தமிழால்! – அதைத் தவிர அவரது பாடல் வரிகளாலும் பிடிக்கும்” என்று லிடியன் சுவைபட பதிலளித்தார்.