மதுரை: தேனியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேனியில் 10 வயது சிறுமி ஒருத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த வழக்கினை விசாரித்த தேனி காவல் துறையினர் சுந்தர்ராஜ், நவீன் மற்றும் துரைக்கண்ணு ஆகிய மூவரை கைது செய்தனர்.
தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இம்மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டின் மீதான தீர்ப்பு புதனன்று வழங்கப்பட்டது. இதில் மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறையின் விசாரணை அறிக்கையில் குறைபாடுகளிருப்பதை சுட்டிக் காட்டியுள்ள நீதிமன்றம், அதற்காக அதிகாரிகளை தனது தீர்ப்பில் கண்டித்துள்ளது.