தமிழகத்தில் வியாழக்கிழமை 9 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் பாதிவாகி இருந்தது. அதிகபட்சமாக, சேலத்தில் 103 டிகிரி வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உள்தமிழகத்தின் சில இடங்களில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுகிறது. தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் வியாழக்கிழமை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக, சேலத்தில் 103 டிகிரி பதிவானது. தருமபுரி, திருத்தணி, கரூர்பரமத்தியில் தலா 102 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரியும், கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சி, வேலூரில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வறண்ட வானிலை நிலவும். உள் தமிழகத்தில் சில இடங்களில் வழக்கத்தை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து வந்தது. இந்த வெப்பநிலை வெள்ளிக்கிழமை குறையும். சென்னையில் காலை நேரத்தில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்சமாக வெப்பநிலை 96 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.