மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து ஆங்காங்கே வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவை புளியகுளத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனம் முழுவதும் 146 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த தங்கம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
எனவே 146 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் அந்த வாகனம் ஆகிவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மும்பையில் இருந்து கோவையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு இந்த தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்வதாக அந்த வாகன ஓட்டுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் நடைபெறும் சோதனைகளில் தற்போது வரை தமிழகத்தில் இருந்து தான் அதிகளவிலான நகை, பணம் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.