சென்னை: உங்கள் வீட்டிலோ அல்லது வாகனத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி சோதனை நடத்துபவர்கள் மீது உங்களுக்கு சந்தேகம் வந்தால்..
வருமான வரித்துறை அதிகாரிகள் மீதே சந்தேகமா? ஆம்.. வர வேண்டும்.
ஏன் என்றால், சென்னையை அடுத்த கொரட்டூரில் மளிகைக் கடை நடத்தி வரும் சிவப்பிரகாசம் என்பவரின் வீட்டில், ஏப்ரல் 2ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி 8 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் சோதனை நடத்தியது.
அப்போது மளிகைக் கடையில் இருந்து எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரூபாயை அவர்கள் எடுத்துச் சென்றனர். பிறகு சிவப்பிரகாசம் விசாரித்த போதுதான், அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளே இல்லை என்பதும், கொள்ளைக் கும்பல் என்பதும் தெரிய வந்தது.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலில் கார் ஓட்டுநர் முருகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவான காரின் எண்ணை வைத்து கார் ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த 3 பேரை கைது செய்து விசாரித்ததில், சிவப்பிரகாசத்தின் கடைக்கு அடிக்கடி வந்து நாய்க்கு பொறை வாங்கிப் போட்ட தீனதயாளன் என்பவர்தான் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
கடை உரிமையாளர் சிவப்பிரகாசத்துடன் பேசும் போது, கடையில் கட்டுக்கட்டாக பணம் எண்ணுவதைப் பார்த்த தீனதயாளன், அவரது வீட்டில் வருமான வரிச் சோதனை என்ற பெயரில் கொள்ளையடிக்க திட்டம் வகுத்துக் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
இதுபோன்று போலி அதிகாரிகள் என்று நீங்கள் சந்தேகித்தால் 8985970149 / 9445953544 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அழைக்குமாறு தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.