சேலம் - சென்னை இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் 5 மாவட்ட விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை தொடர முடியாது. சுற்றுச்சூழல் துறை அனுமதி அவசியம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரூரில் வெட்டப்பட்ட மரங்களுக்காக 1200 மரங்கள் நட இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த திட்டத்தில் நிலம் தர விருப்பம் இல்லாதவர்களை துன்புறுத்தக் கூடாது என்றும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்தவும், நிலத்தின் உரிமையாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் அன்று முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
மேலும், ஜனவரி 4 ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வமான வாதங்களை அனைத்து தரப்பிலும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பளிக்க உள்ளனர்.