சென்னையில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த மாதம் 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் தலித் மலர், வட சென்னை தெற்கு மாவட்டச் செயலர் உஷாராணி ஆகியோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினராம்.
இருவரது பேச்சையும் பதிவு செய்த போலீஸார், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனைக் கேட்டனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின்பேரில், தலித் மலர், உஷாராணி ஆகியோர் மீது 3 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.