சென்னை: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தால் நீட் நுழைவுத் தேர்வு கிடையாது என்பதை மனதில் கொண்டு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், நீட் தோ்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டன.
யாருக்கு வாக்களிப்பது என்று மாணவா்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது.
காங்கிரஸ் அரசு அமைந்தால் நீட் தோ்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் நீட் தேர்வு தொடரும். இனி, சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 ஆம் தேதி.
மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 12) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரி, சேலம், தேனி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, “தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்த அனிதாவை கவுரவப்படுத்த எங்கள் அறிக்கையில் ஒரு வரி இருக்கிறது. அந்த வரி, நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை மாநிலங்களே முடிவு செய்யும் என்ற உரிமையை வழங்கும் வரி” என்று குறிப்பிட்டார்.