மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை அமிர்தா பல்கலைக்கழகத்துக்கு 8-ஆவது இடம் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் துணைவேந்தர் பி.வெங்கட்ரங்கன் வெளியிட்டுள்ள அறிக்கை:
2019-ஆம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், இந்திய பல்கலைக்கழகங்களில் அமிர்தா பல்கலைக்கழகம் மீண்டும் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல நாட்டில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் அமிர்தா மருத்துவக் கல்லூரிக்கு 5-ஆவது இடம் கிடைத்துள்ளது. கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஸ்ரீமாதா அமிர்தானந்த மயி கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றளிப்பவையாக இந்த சாதனைகள் உள்ளன.
ஆசிரியர்கள், மாணவர்களின் திறமையான உழைப்பின் காரணமாக அமிர்தா கல்வி நிறுவனங்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்குவது, மிகச் சிறந்த ஆசிரியர்கள், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தக் கல்வி நிறுவனம் நிலைத்தன்மை உடையது.
மாதா அமிர்தானந்தமயி மடத்தின் மூலம் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளம், தமிழகம், கர்நாடக மாநிலங்களில் செயல்பட்டு வரும் அமிர்தா கல்வி நிறுவனங்களில் சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அமிர்தா கல்வி நிறுவனமானது 1,800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மூலம் 200-க்கும் மேற்பட்ட கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ரூ.250 கோடி ஆராய்ச்சி நிதி, நூற்றுக்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பெற்றுள்ளது. ஹரியாணா, தெலங்கானா மாநிலங்களிலும் அமிர்தா கல்வி நிறுவனம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.