நாமக்கல் அருகே நீச்சல் பழகுவதற்குச் சென்ற இரு சிறுவர்கள், சனிக்கிழமை கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், பரளி ஊராட்சி, கடக்கால்புதூரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் மணிகண்டன் (14). நாகராஜ் மகன் நல்லுசாமி என்ற விக்னேஸ்வரன் (14). நண்பர்களான இருவரும், அணியாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர். தேர்வு முடிந்து, தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமை பிற்பகல் இருவரும், நண்பர்கள் சிலருடன், லத்துவாடி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகுவதற்குச் சென்றுள்ளனர்.
அந்த கிணறு உபயோகமின்றி பாழும் கிணறாக இருந்துள்ளது. கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்தபோது, மணிகண்டன் திடீரென நீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்ற முயன்ற விக்னேஷ்வரனும் நீரில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் தீயணைப்புப் படைவீரர்கள், நீரில் மூழ்கி பலியான மணிகண்டனின் உடலை முதலில் மீட்டனர். ஒரு மணி நேரத்தேடலுக்கு பின்பு, விக்னேஸ்வரனின் உடலை மீட்டனர். இச் சம்பவம் தொடர்பாக, மோகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.