தேனி: தேர்தல் பிரசாரத்தின் போது தவறான தகவல்களை அளிப்பதாக தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் இளங்கோவன் மீது வழக்குத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனியில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் செய்தியாளர்களை சந்தித்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
அப்போது அவர் கூறியதாவது, காவிரியின் குறுக்கே மேகதாது தடுப்பணை கட்ட தேனியில் இருந்து மணல் அள்ளிக் கடத்தப்படுவதாகவும், காவிரியில் தடுப்பணைக் கட்ட பன்னீர்செல்வமே மணலை அனுப்புவதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். இது ஜமுக்காளத்தில் வடிகட்டியப் பொய். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்த அவதூறானப் பேச்சுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகளை ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி உரிமையைப் பெறுவதில் திமுக - காங்கிரஸ் அரசுகள் வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும். தேர்தல் பிரசாரத்தின் போது திமுக சொல்லும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.