ஸ்டாலினின் முதல்வர் நாற்காலிக் கனவு நிறைவேறாது என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.
சேலம் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் பிரசாரப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சேலம் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:
மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது.
பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1,000 வழங்கப்பட்டது.
அடுத்து ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டம், திமுக நீதிமன்றம் சென்ற காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அந்தத் தொகை ஏழைகளுக்கு வழங்கப்படும்.
காவிரி-கோதாவரி நதி நீர் இணைப்பு திட்டத்தின் மூலம் சேலத்தில் உள்ள வறட்சியான பகுதிகள் பாசனம் பெற்று பசுமையடையும். மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அளித்து சேவை செய்து வரும் தமிழக அரசை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரக்குறைவாகப் பேசி வருகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு எனது அரசியல் வாழ்க்கை முடியும் என பேசி வருகிறார். இந்தத் தேர்தலுக்குப் பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கையே தொடங்க உள்ளது.
மு.க.ஸ்டாலினின் கனவு கானல் நீராகிவிடும். அவரது முதல்வர் நாற்காலி கனவு எப்போதும் நிறைவேறாது.
நீங்கள் போட்ட எல்லா திட்டங்களையும் தவிடுபொடியாக்கி விட்டோம். ஆட்சியைக் கவிழ்க்க செய்த சதியை முறியடித்து விட்டோம்.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் முதற்கட்டமாக 18 தொகுதிகளிலும், அதற்கடுத்து நடைபெற உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி நூறு சதவீத வெற்றி பெறும் என்றார்.