தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை 

தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும் என்று அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்  கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை 

சென்னை: தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும் என்று அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்  கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் எதிராக வீசிவருகிற கடும் எதிர்ப்பு அலையை தாங்க முடியாமல் நவீன கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ளது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்தக் கூட்டணி 2004 இல் இணைந்து போட்டியிட்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பத்தாண்டு ஆண்டுகாலம் சிறப்பாக நடத்தியிருக்கிறது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதோடு, தமிழகமும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைப் பெற்று முன்னேறியது. ஆனால், பா.ஜ.க. - அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி திரைமறைவு பேரத்தின் அடிப்படையில் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அ.தி.மு.க. மீது தமிழக ஆளுநரிடம் 25 ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறிய பா.ம.க. 70 நாட்கள் கழித்து, யார் மீது சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டுமென்று கோரியதோ, அவர்களோடு கூட்டணி சேர்ந்தது. எனவே, இந்தக் கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுகிற சூழல் ஏற்பட்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிச்சாமியும், அன்புமணி ராமதாசும், கடைந்தெடுத்த அவதூறு பிரச்சாரத்தை கையாண்டு வருகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் திரு. ராகுல்காந்தி அவர்கள் கூறியதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார். ராகுல்காந்தி அவர்கள் இப்படி பேசியதாக கூறப்படுகிற அவதூறு பேச்சுக்கு என்ன ஆதாரம் ? என்ன அடிப்படை ? எந்த ஊடகத்தில் வெளிவந்தது ? இதற்கு அன்புமணி ராமதாஸ் ஆதாரத்தை காட்டுவாரா ? மற்றவர்களுக்கு சூடு சுரணை இருக்கிறதா என்று கேட்கிற அன்புமணி ராமதாஸ் அவருக்கு அது கடுகளவாவது இருக்குமேயானால் ராகுல்காந்தி அவர்கள் பேசாத பேச்சுக்கு ஆதாரம் காட்ட முடியுமா ? இப்படி எல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகத் தான் முடியும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கொடுத்தது யார் ? மத்திய பா.ஜ.க. நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் இருக்கிற மத்திய நீர்வள ஆணையம் தான் கர்நாடக அரசுக்கு கடந்த 2018 நவம்பர் 26 அன்று அனுமதி அளித்தது. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் செய்யக் கூடாது என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாட்டை கர்நாடக அரசு மீறுவதற்கு துணை போனது பா.ஜ.க. அரசு என்பதை அன்புமணி ராமதாசால் மறுக்க முடியுமா ?

மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கொடுத்து தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, துரோகம் செய்த பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு துரோகம் செய்து, வஞ்சித்த பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. - பா.ம.க.வுக்கு உரிய தண்டனையை கொடுக்க வேண்டிய வாய்ப்பாக வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்த பா.ஜ.க.வை ஆதரிக்கிற கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணித்து நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com