தமிழகத்தில் புகையிலை பொருள்கள் விற்பனைக்கு நிரந்தரத் தடை விதித்து புதிய அரசாணை வெளியிடக்கோரிய வழக்கில் தமிழக தலைமை செயலர், தமிழக குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த செந்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வெளியானது.
இந்த அரசாணை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிப்பு செய்யும் வகையில் உள்ளது.
அவ்வாறு இல்லாமல் நிரந்தரமாக புகையிலை பொருள்கள் விற்பனைக்கு தடை விதித்து புதிய அரசாணை வெளியிட வேண்டும். மேலும் தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அனைத்து நகரங்களிலும் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக அனைத்துக் கடைகளிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும். அதனை மீறி புகையிலை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக தலைமை செயலர், தமிழக குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.