மதுரை மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுகின்றன. இதே போன்று திமுகவைச் சேர்ந்தவர்கள் சார்பிலும், பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால் தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே, மதுரை மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில், பணப்பட்டுவாடாவைத் தடுக்க மதுரை தொகுதி மட்டுமன்றி, அனைத்து தொகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் பறக்கும்படையினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுநலன் எனக்கூறி வழக்குத் தொடர்வதை மனுதாரர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். எனவே, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர். அப்போது மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com