ராகுல் பேசியது என்ன? அன்புமணி ஆதாரம் காட்டுவாரா? - கே.எஸ். அழகிரி

மற்றவர்களுக்கு சூடு சுரணை இருக்கிறதா என்று கேட்கிற அன்புமணி ராமதாஸ் அவருக்கு அது கடுகளவாவது இருக்குமேயானால் ராகுல் காந்தி பேசாத
ராகுல் பேசியது என்ன? அன்புமணி ஆதாரம் காட்டுவாரா? - கே.எஸ். அழகிரி


மற்றவர்களுக்கு சூடு சுரணை இருக்கிறதா என்று கேட்கிற அன்புமணி ராமதாஸ் அவருக்கு அது கடுகளவாவது இருக்குமேயானால் ராகுல் காந்தி பேசாத பேச்சுக்கு ஆதாரம் காட்ட முடியுமா? இப்படி எல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகத் தான் முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று செவ்வாய்க்கிழமை (ஏப் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மத்திய பாஜக ஆட்சிக்கும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சிக்கும் எதிராக வீசி வருகிற கடும் எதிர்ப்பு அலையைத் தாங்க முடியாமல் நவீன கோயபல்ஸ் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ளது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்தக் கூட்டணி 2004-ல் இணைந்து போட்டியிட்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பத்தாண்டு காலம் சிறப்பாக நடத்தியிருக்கிறது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதோடு, தமிழகமும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைப் பெற்று முன்னேறியது.

ஆனால், பாஜக - அதிமுக அமைத்துள்ள கூட்டணி திரைமறைவு பேரத்தின் அடிப்படையில் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அதிமுக மீது தமிழக ஆளுநரிடம் 25 ஊழல் குற்றச்சாட்டுகள் கூறிய பாமக 70 நாட்கள் கழித்து, யார் மீது சிபிஐ விசாரணை வைக்க வேண்டுமென்று கோரியதோ, அவர்களோடு கூட்டணி சேர்ந்தது. எனவே, இந்தக் கூட்டணிக்கு எந்தக் கொள்கையும் கிடையாது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறுகிற சூழல் ஏற்பட்டிருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமியும், அன்புமணி ராமதாஸும் கடைந்தெடுத்த அவதூறு பிரசாரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் ராகுல் காந்தி கூறியதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார். ராகுல் காந்தி இப்படி பேசியதாக கூறப்படுகிற அவதூறுப் பேச்சுக்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை? எந்த ஊடகத்தில் வெளிவந்தது? இதற்கு அன்புமணி ராமதாஸ் ஆதாரத்தைக் காட்டுவாரா?

மற்றவர்களுக்கு சூடு சுரணை இருக்கிறதா என்று கேட்கிற அன்புமணி ராமதாஸ் அவருக்கு அது கடுகளவாவது இருக்குமேயானால் ராகுல் காந்தி பேசாத பேச்சுக்கு ஆதாரம் காட்ட முடியுமா ? இப்படி எல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகத் தான் முடியும்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கொடுத்தது யார்? மத்திய பாஜக நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் இருக்கிற மத்திய நீர்வள ஆணையம் தான் கர்நாடக அரசுக்கு கடந்த 2018 நவம்பர் 26 அன்று அனுமதி அளித்தது.

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் செய்யக் கூடாது என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டை கர்நாடக அரசு மீறுவதற்கு துணை போனது பாஜக அரசு என்பதை அன்புமணி ராமதாஸ் மறுக்க முடியுமா?

மேகேதாட்டுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கொடுத்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, துரோகம் செய்த பாஜகவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது.

தமிழகத்திற்கு துரோகம் செய்து, வஞ்சித்த பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ள அதிமுக - பாமகவுக்கு உரிய தண்டனையைக் கொடுக்க வேண்டிய வாய்ப்பாக வருகிற மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளைத் தாரைவார்த்த பாஜகவை ஆதரிக்கிற கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணித்து நிராகரிக்க வேண்டும்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com