வாக்களிக்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்களிக்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!


ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அனைவரும் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் வசதிக்காக, அவர்களின் வாக்குச்சாவடி பெயர், எண், தொகுதி எண், பாகம் எண், ஆகியவற்றுடன் வாக்காளர் பெயர், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாக்காளர் சீட்டு வெறும் வழிகாட்டியாகத்தான் பயன்படுத்த முடியும். அத்துடன், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டையும் அவசியம்.

12 அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

எனவே, பல்வேறு காரணங்களால் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாதவர்களைத் தவிர, மற்ற அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை இங்கே தினமணி.காம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

சரி, வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடிவு செய்தாகிவிட்டது. யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்வது உங்கள் விருப்பம். நாட்டுக்கு நன்மை செய்வார்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்கு உங்கள் வாக்கினை செலுத்தலாம். அதில் எந்த நிர்பந்தமும் கிடையாது.

முதல் விஷயம் உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதனைக் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாத பட்சத்தில், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வரலாம்.

அவை,
1. வாக்காளர் அடையாள அட்டை
2. பாஸ்போர்ட்
3. ஓட்டுநர் உரிமம்
4. மத்திய, மாநில அரசுப் பணியாளர்களின் அடையாள  அட்டை
5. புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம்
6. மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பதிவேட்டின்படி வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
7. பான் அட்டை
8. நூறுநாள்வேலைத் திட்ட அட்டை
9. மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு அட்டை
10. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியர் ஆணை
11.  எம்எல்ஏ- எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை
12. ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றைக் கொண்டு வாக்களிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது மேற்கண்ட அடையாள அட்டையும் இருக்கிறது என்றால் பிறகென்ன? வாக்களிக்க வேண்டியதுதானே என்று கேட்கலாம்.

இது தவிர இன்னும் சில விஷயங்கள் இருக்கிறதே? வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று விரிவாக விவரித்தார்.

அதுபற்றி விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.

வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரைத் தவிர வேறு யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு செல்போனைக் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஊடகவியலாளர்களுக்கும் பொருந்தும்.

முதல் தலைமுறை வாக்காளரா? எப்படி வாக்களிப்பது என்ற பயமா??

தேர்தல் நாளன்று சட்டம் - ஒழுங்குப் பிரச்னை எதுவும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே செல்போன்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

அதே சமயம், வாக்குச்சாவடியில், வாக்காளர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொள்ள எந்த வசதியும் செய்து தரப்படாது என்று தெரிவித்தார்.

அதே போல, பூத் ஸ்லிப். இன்னும் எனக்கு பூத் ஸ்லிப் கிடைக்கவில்லை. என்னால் வாக்களிக்க முடியாதா? என்று கேட்பவர்களுக்காக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் இன்று விளக்கம் அளித்தார்.

அந்த விளக்கத்தில், வாக்களிக்க வேண்டும் என்றால் பூத் ஸ்லிப் கட்டாயம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை. பூத் ஸ்லிப் என்பது வாக்காளரின் பெயர், வாக்குச்சாவடி பற்றிய விவரம் போன்றவை இருக்கும் ஒரு வழிகாட்டி. அவ்வளவே. இதன் மூலம் வாக்களிக்கும் பணி எளிமையாகுமே தவிர, அது முக்கியம் அல்ல.

அதே சமயம், பூத் ஸ்லிப் இருப்பதால், அடையாள அட்டைகள் எதுவும் கொண்டுவரவில்லை என்று கூற முடியாது. தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் அடையாள அட்டைகளில் ஒன்றை கட்டாயம் கொண்டு வந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை மாலைக்குள் பூத் ஸ்லிப் வழங்கும் பணி நிறைவடைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு வேளை பூத் ஸ்லிப் உங்களுக்கு வழங்கப்படாவிட்டாலும், வாக்குச்சாவடிக்கு அருகே தேர்தல் அதிகாரிகள் விடுபட்ட பூத் ஸ்லிப்புகளை வழங்குவதற்காக அமர்ந்திருப்பார்கள். அவர்களிடம் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com