சென்னை: வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரத்தில் அளவுக்கு அதிகமாக கூடிய கூட்டத்தைக் கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரம் என்னும் இடத்தில் வியாழனன்று நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வந்தது.
அப்போது மாலை வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வேலு மற்றும் மற்றுமொரு முன்னாள் எம்.எல்,வான செந்தில் ஆகியோர் தலைமையில், ராசாத்திபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கும்பலாக வாக்குச்சாவடியை நெருங்கி வந்தனர்.
அவர்களை கலைந்து செல்லுமாறு முதலில் மாநில காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவலர்கள் கூட்டத்தைக் கலைக்கும் விதமாக வானத்தை நோக்கிச் சுட்டனர்.
இதனால் கூட்டமானது அச்சத்துடன் கலைந்து ஓடியது. அப்போது ஒரு சிலர் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.