சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மூலவர் சந்நிதி வியாழக்கிழமை (ஏப். 18) முதல் 4 நாள்களுக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு வரை திறந்திருக்கும் என்று கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலையில் புகழ்பெற்ற சித்ரா பௌர்ணமி விழா வியாழக்கிழமை (ஏப். 18) மாலை 7.05 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (ஏப். 19) மாலை 5.35 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.
முன்னேற்பாடு பணிகள்
சித்ரா பௌர்ணமிக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி, ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய 4 நாள்களிலும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு நடை சாற்றும் வரை தொடர்ந்து மூலவர் சன்னதி திறந்தே இருக்கும். ரூ. 50 கட்டண தரிசன சேவையும் அமலில் இருக்கும்.
4 நாள்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து: அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், இந்த 4 நாள்களுக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது.