சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பேருந்து வசதி இல்லாததால், ஏராளமான பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகிறார்கள்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை மற்றும் இதர கோயில்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதாகவும், அதிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது, தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
நேரம் செல்ல செல்ல திருவண்ணாமலைக்குச் செல்ல ஏராளமானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருவார்கள் என்பதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ஓசூரில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல பேருந்து கிடைக்காததால், அங்கும் ஏராளமான பயணிகள் தவித்து வருகிறார்கள்.