ஆண்டிபட்டியில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாக தேனி மக்களவைத் தொகுதியின்அமமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அமமுக கட்சி அலுவலகம் அமைந்துள்ள வணிக வளாகத்தில் வைத்திருந்த ரூ.1 கோடியே 48 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும் அமமுக கட்சியினர் 156 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரைக் கைது செய்தனர். இதனையடுத்து, ஆண்டிபட்டிக்கு புதன்கிழமை வந்திருந்த தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். இந்நிலையில், தேர்தல் நெறிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அதை மீறி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாக ஆண்டிபட்டி போலீஸார் தங்க. தமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.