மாநிலம் முழுவதும் தயார் நிலையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள்

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி மாநிலம் முழுவதும் நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி மாநிலம் முழுவதும் நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள் சோர்வடைந்து மயக்கமடையாமல் இருக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உப்புநீர்க் கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17-ஆவது மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து வாக்குப்பதிவுக்கு ஆயத்தமாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 67 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 5.8 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த நிலையில், கோடை காலம் தீவிரமடைந்திருப்பதால் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருக்கும்போது மயக்கமோ,  நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டாலோ அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை சார்பில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி ஆகியோர் கூறியதாவது:
வாக்குப் பதிவு தினத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் செயல்படும். மொத்தம் 416 நடமாடும் மருத்துவக் குழுக்கள்  மாநிலம் முழுவதும் தயார்நிலையில் உள்ளன. அதுமட்டுமன்றி, மாவட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்தியல் நிபுணர்கள், சிறப்பு மருத்துவர்கள் என அனைவரையும் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் வாக்காளர்களுக்கு உப்புநீர்க் கரைசலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் வாக்குச்சாவடிகளுக்கு விரைந்து செல்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி விழாவும், மதுரையில் சித்திரைத் திருவிழாவும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதால், அங்கு கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com