இன்னும் ஒரே மாதத்தில் நரேந்திர மோடி முன்னாள் பிரதமராவது உறுதி என்று ஏஐஎம்எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக ஔரங்கபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஒவ்வொரு இடத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்திலும் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார். அப்படியென்றால் நான் பிரதமர் மோடி, பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகளிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.
மேலகான் பகுதியில் உள்ள மசூதியின் அருகில் குண்டு வைத்து 6 அப்பாவி மக்களை கொன்ற சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு எதற்காக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தீர்கள்? இதுதான் நீங்கள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதற்கான ஆதாரமா? தனது சாபத்தால் தான் ஹேமந்த் கார்கரே உயிரிழந்ததாக சாத்வி கூறும்போது பிரதமர் மோடியால் எவ்வாறு மும்பையில் வாக்கு சேகரிக்க முடியும்.
மும்பை தாக்குதலின் போது ஹிந்து, முஸ்லிம் என்று பார்க்காமல் அஜ்மல் கசாப் மற்றும் இதர பயங்கரவாதிகளை எதிர்த்து போராடி இந்த ஹிந்துஸ்தானுக்காக உயிர் தியாகம் செய்தவர் தான் ஹேமந்த். எனவே சாத்வியின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடி நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும்.
இன்னும் ஒரே மாதம் தான் பிறகு நரேந்திர மோடி முன்னாள் பிரதமராவது உறுதி என்று தெரிவித்தார்.