சென்னை: தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு , இந்திய தேர்தல் ஆணையத்திற்கு , தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரை செய்துள்ளார்.
தமிழகத்தில் வேலூர் நீங்கலாக உள்ள 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் கடந்த 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக வாக்குப்பதிவு மைய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தமிழகத்து தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யபிரத சாஹு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரை செய்துள்ளார்.
அவர் தனது பரிந்துரையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குப் பதிவு மையங்கள், பூந்தமல்லியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையம் மற்றும் கடலூரில் ஒரு மையம் என மொத்தம் பத்து வாக்குப்பதிவுமையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற பரிந்துரைத்துளார்.
ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம்தான் இறுதிமுடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.